சினிமா

ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: அரசியல் காரணமா?- விசாரணையில் அம்பலமான உண்மை!

By Christon
27 Apr 2026, 05:57 PM
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், அரசியல் பின்னணி ஏதுமில்லை என்றும், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேற்று ஈசிஆர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றபோது, தனது காரை அருகில் நிறுத்தியிருந்தார். அவர் உணவருந்திவிட்டுத் திரும்பியபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துத் திருவான்மியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அரசியல் குறித்து அவர் காரசாரமான கருத்துகளைத் தெரிவித்து வருவதால், இந்தப் பாதிப்புக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

சமூக வலைதள விவாதங்களும் சந்தேகமும்

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையைப் பற்றி ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து வருவதால், தவெக ஆதரவாளர்களுக்கும் இவருக்கும் இடையே இணையதளங்களில் கடும் வாக்குவாதங்கள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால், இதன் பின்னணியில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என ஜேம்ஸ் வசந்தன் சந்தேகத்தை எழுப்பினார். இதனால் இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்று, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெளிவந்த நிஜக் காரணம்

சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்திற்கு அரசியல் மோதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அருகில் உள்ள ஒரு வீட்டின் வாசலை மறித்து நிறுத்தியதுதான் பிரச்சினைக்குக் காரணமாக இருந்துள்ளது. அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண், கார் நின்றிருந்ததால் தான் வீட்டிற்குள் செல்ல முடியாமல் ஆத்திரமடைந்து, கல்லால் அடித்துக் கார் கண்ணாடியை உடைத்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாகத் திருவான்மியூர் போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.