இந்தியா

ஒரு காலத்தில் தொழில்நுட்ப வல்லுநர்.. தற்போது யாசகர்.. இதுதான் காரணம்

By Kumudam News
27 Nov 2024, 03:47 AM
முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் பெங்களூர் நகரில் யாசகம் பெறும் காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் (Frankfurt) முன்னணி தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியுள்ளார். இவர் தனது பெற்றோர்கள் இழப்பு மற்றும் காதலி விட்டுவிட்டு  சென்றதையடுத்து மதுவிற்கு அடிமையாகியுள்ளார். உண்ண உணவு, இருக்க இடம் போன்ற எந்த அடிப்படை வசதிகளுல் இல்லாத இந்நபர் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் யாசகம் செய்து வாழ்ந்து வருகிறார்.

சிகப்பு நிற டீ -ஷர்டுடன் யாசகம் வேண்டி திரிந்த தொழில்நுட்ப வல்லுநரிடம் சரத் என்ற நபர் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்நபர், நான் ஒரு முன்னணி பொறியாளர் என்றும் என் பெற்றோர்கள் உயிரிழந்ததையடுத்து மதுவிற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்பம், தியானம், அறிவியல் குறித்து பேசிய அந்நபர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் டேவிட் ஹியூம் ஆகியோர் குறித்தும் பேசியுள்ளார்.  சரத், அந்நபருக்கு உதவி செய்ததாக கூறிய நிலையில் அதை தொழில்நுட்ப வல்லுநர் மறுத்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநர் குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சரத், இந்நபரை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்த போது அவர்கள் காவல்துறையின் விசாரணைக்கு பின்பே மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, அந்நபரை தாங்கள் தேடி வருவதாகவும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.