இந்தியா

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

By VASUKI
04 Jul 2025, 04:07 PM
உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்டா தாக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ராமு மற்றும் பிரஜ்பாலா தம்பதிகள். இதில் பிரஜ்பாலா ஐந்து மாத கர்ப்பிணி உள்ளார். இவர் ( ஜூன் 2 ) அன்று தனது கணவருக்காக உணவு சமைத்துள்ளார். அதனை சாப்பிட்ட கணவர் ராமு, மனைவி சமைத்த உணவில் அதிக உப்பு சேர்த்ததற்காக தனது மனைவியான பிரஜ்பாலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இருவருக்கு வாக்குவாதம் முற்றியதில் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் ராமு கோபமடைந்து, உணவு தட்டையை எறிந்து, பின்னர் பிரஜ்பாலாவை அடித்து, குத்தி, தள்ளிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், பிரஜ்பாலா வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்கு கடுமையாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அங்கிருந்து அலிகார் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி, அன்று இரவு பிரஜ்பாலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வாக்குவாதம், ராமுவின் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு தொடர்பாகவும், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்திற்கு பிறகு, ராமு தப்பிச் சென்றுள்ளார். ஆனால், கிராம மக்கள் அவரை அருகிலுள்ள காலி வீட்டில் மறைந்திருந்தபோது பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரஜ்பாலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.