'கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே மாவட்டச் செயலாளராக குமரகுரு இருக்கிறார். அதேபோல ஆறு தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி.சண்முகத்தை நீக்கிவிட்டு பசுபதியை மாவட்டச் செயலாளராக எடப்பாடி நியமித்திருக்கிறார்.
ஆக 11 தொகுதிகளுக்கு இரண்டு மாவட்டச் செயலாளர் மட்டுமே இருப்பதை பிரித்து கடலூரைப்போல இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும்' என்று ரத்தத்தின் ரத்தங்கள் எழுப்பும் போர்க்குரல்தான் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. கடமுடா!
இதுகுறித்து மூத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவுக்கு சென்றாலும், அதிமுக கீழ்மட்ட லெவலில் பழைய பலத்துடனேயே இருக்கிறது. அம்மா உயிரோடு இருந்தபோது ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளுக்கு சி.வி.சண்முகத்தையும், ஐந்து தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் மோகனையும் மாவட்டச் செயலாளராக நியமித்தார்.
அ.தி.மு.க.வுக்குள் ஐவர் குழு, நால்வர் குழு என கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம் என இருந்தபோது சி.வி.சண்முகத்தின் மீது, 'கட்சிக்குள் கோஷ்டி அரசியல் செய்கிறார்' என கிளப்பிவிட்டனர். பிறகு அந்த இடத்திற்கு எம்.சி.சம்பத்துக்கு வேண்டிய விழுப்புரம் மாவட்ட மருத்துவரணியின் மாவட்டச் செயலாளராக இருந்த டாக்டர் லட்சுமணனை மாவட்டச் செயலாளராக அம்மாவிடம் சொல்லி நியமித்தனர். பிறகு அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது.
அம்மா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். பிரிந்து சென்றபோது, அவரோடு டாக்டர் லட்சுமணனும் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த மாவட்டச் செயலாளர் பதவி சி.வி.சண்முகத்திற்கே மீண்டும் வந்தது. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை எடப்பாடி நியமித்து வந்தார். குறிப்பாக பக்கத்து மாவட்டமான கடலூரில் மொத்தம் 9 சட்டமன்றத் தொகுதிகள். இங்கே நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். ஆனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி தனித்தனி மாவட்டங்களாக ஆன பிறகும் II சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு மாவட்டச் செயலாளர்களே இருந்தனர்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சி.வி.சண்முகம் எடப்பாடிக்கு எதிராக வேலுமணியோடு கைகோத்து செயல்பட்டதால் சண்முகத்தை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளராக பசுபதியை நியமித்தார் எடப்பாடி அந்த வகையில் தற்போது விழுப்புரத்தில் 6 தொகுதிகளுக்கும் பசுபதியே மாவட்டச் செயலாளராக இருப்பது எப்படி என்று கேள்வி கேட்கிறார்கள்.
வானூர் முன்னாள் எம்.எல்.ஏ. சக்கரபாணி இரண்டு முறை வானூரில் தொடர்ந்து வெற்றிபெற்றவர். எங்கே மூன்றாவது முறையாக போட்டியிட்டு வென்றால் அமைச்சர் பதவி கேட்பேனோ என எனக்கு சீட் கிடைப்பதை சி.வி.சண்முகம் தடுத்துவிட்டார்' என்று குற்றச்சாட்டு வைக்கிறார் சக்கரபாணி. அதோடு 'எனக்கு வானூரையும் திண்டிவனத்தையும் ஒதுக்கி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினால் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றும் எடப்பாடியிடம் கூறியிருக்கிறார். 'செஞ்சியையும் மயிலத்தையும் முன்னாள் எம்.பி. சேவல் ஏழுமலைக்கு கொடுங்கள்' என்றும் கேட்கிறாராம். 'பசுபதிக்கு விழுப்புரமும் விக்கிரவாண்டியும் போதும்' என்று ரரக்கள் எடப்பாடியிடமும் சொல்லி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புரீதியாக ஐந்து தொகுதிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இங்கே முன்னாள் அமைச்சர் மோகனுக்கு சங்கராபுரம் சீட்டு கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். அதேபோல சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜசேகரும் சங்கராபுரத்தை குறிவைத்து கேட்டார். 'உன்னால செலவு பண்ண முடியாது' என்று அவருக்கும் குமரகுரு சீட்டு கொடுக்கவில்லை.
இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் ராஜாராமுக்கு சீட்டு கொடுக்க குமரகுரு முயன்றபோது கட்சி நிர்வாகிகள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சின்னசேலம் பேரூர் கழக செயலாளராக இருந்த ராகேஷுக்கு சீட்டு கொடுத்தார். ஆரம்பத்தில் ராகேஷ், குமரகுரு ஆதரவாளராகத்தான் இருந்தார். பிறகு சி.வி.சண்முகம் பக்கம் சென்றுவிட்டார்.
தற்போது 'கள்ளக்குறிச்சியை, சங்கராபுரம் கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரித்து அங்கே தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுங்கள்' என்று முன்னாள் அமைச்சர் மோகன், எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் 'அவரால் ஓடியாடி வேலை செய்ய முடியாது. இந்த நிலையில் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ஞானவேலை கொண்டு வந்துவிடலாம்' என்று குமரகுரு நினைக்கிறார். இருவரும் உடையார் சமூகம் என்பதால் இங்கே வன்னியர் அல்லது பட்டியலினத்தவர்களை மட்டுமே போட முடியும். அந்த வகையில் வன்னியரான கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியச் செயலாளரான ராஜசேகர் சி.வி.சண்முகம் பக்கம் இருப்பதால் இவருக்கு வாய்ப்பில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களான கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு குமரகுரு ஓகே. சொன்னாலும் அவரால் செலவு எதுவும் முடியாது. அடுத்து கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.வும் இளைஞருமான பிரபுவுக்கு வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை ராஜீவ் காந்தி என்பவருக்கு கொடுத்ததால் 798 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தவெக அருள் விக்னேஷிடம் தோற்றுப்போனார். பிரபு நின்றிருந்தால் எப்படியாவது ஜெயித்திருப்பார். உளுந்தூர்பேட்டையில் குமரகுருவும் ஜெயித்திருப்பார். ஆனால் 'பட்டியலினத்தில் வசதியான பிரபு வளர்ந்தால் பிரச்னை ஆகிவிடும்' என்று அவரை தேர்தல் வேலை பார்க்க மட்டும் குமரகுரு வைத்துக்கொண்டார்.
தற்போதுகூட திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. டி.எஸ்.பி. பழனிச்சாமியை ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக ஆக்கிவிட்டு சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மூன்று தொகுதிகளுக்கும் தானே மாவட்டச் செயலாளராக இருக்க குமரகுரு காய் நகர்த்திவருகிறார்” என்று சொல்லி முடித்தனர்.
கட்சியே அந்தல சிந்தலயாகிட்டு இருக்கு அதை முதல்ல கவனிங்க!