அரசியல்

திமுக - அதிமுக கூட்டணி: அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சேர்க்கும்- டிடிவி தினகரன்

By Christon
11 Jul 2026, 01:26 PM
திமுக - அதிமுக கட்சிகள் இணைவது குறித்த கேள்விக்கு, அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக - அதிமுக கட்சிகள் இணைவது குறித்த கேள்விக்கு, அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், பாஜகவை எதிர்ப்பதற்காகத் தவெகவும் திமுகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் எனத் திருமாவளவன் கூறியிருப்பது ஒரு அரசியல் கருத்து மட்டுமே என்றார். தொடர்ந்து, திமுகவும் அதிமுகவும் ஒன்றிணையுமா என்ற கேள்விக்கு விடையளித்த அவர், "அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும். இதனை நாம் கடந்த காலங்களிலேயே பார்த்திருக்கிறோம்; பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்தது போலப் பல முன்னுதாரணங்கள் இங்கு உள்ளன" என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுக கூட்டணியில் இருப்பவர்களைத் தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து, தவெக கூட்டணியில் வைத்துக் கொள்வது நியாயம் எனில், எந்தவொரு கூட்டணியும் நியாயமானதுதான் என்றும் அவர் விளக்கமளித்தார்.

சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "இந்தத் தேர்தலில் விஜய் 35 சதவீத வாக்குகள் பெற்று, 108 இடங்களை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ளார் என்று கருதினால், அவரை வீழ்த்துவதற்கான வியூகங்களை வருங்காலத்தில் மற்ற அரசியல் கட்சிகள் எடுப்பதில் எந்தவொரு தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.