அரசியல்

ஊடக விவாதங்களுக்குக் கட்டுப்பாடு: தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிரடி அறிவிப்பு!

By Christon
26 Feb 2026, 10:59 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊடகங்களில் பங்கேற்பது தொடர்பாகக் கட்சியின் தலைமை இன்று முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சிகளில் தவெக சார்பில் பேசிய நபர்களின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளானது.

நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு

இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.