அரசியல்

திருச்சி கிழக்கில் போட்டியில்லை... அமைச்சர் ஆசையும் இல்லை! - திருமாவளவன் ஓபன் டாக்

By Sumalekha
29 Jun 2026, 05:41 PM
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய திருமாவளவன், "திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக பலரும் பேசுகிறார்கள். ஆனால், 100 சதவீதம் எந்த இடைத்தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். இந்த முடிவை முதல்வர் விஜய்யிடமும் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்" என்றார்.

மேலும், "எனக்கு அமைச்சர் பதவி மீது எந்தவித ஆசையும் இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்னை வற்புறுத்தியது உண்மைதான். ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை" என்றும் விளக்கமளித்தார்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சிதறிப்போனது. அதற்கான உண்மையான காரணங்களை ஆராயாமல், இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவை மட்டுமே பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனங்கள் கட்சித் தொண்டர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

தன்னை நோக்கி முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் கூட்டணி தொடர்பான சில நினைவுகளையும் திருமாவளவன் பகிர்ந்து கொண்டார். அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.