பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக் கூறி திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் திமுக அமளி:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் திட்டம் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், முதலமைச்சர் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அதுகுறித்து உடனடியாக விவாதிக்க அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிய நிலையில், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளியேறும்போதும், “அனுமதி கொடு... அனுமதி கொடு...” என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வெளிநடப்புக்குப் பின்னர் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து, பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“பரந்தூர் விமான நிலையம் குறித்து 55-வது விதியின் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால், முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.” என்றும்,
“தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.” என்றும்,
“சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம்.”என்றும்,
“ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன.” என்றும்,
“பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.” என்றும் அவர் கூறியிருந்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு:
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.”என்றும்,
“அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.” என்றும்,
“மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!” என்றும்,
“சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.” என்றும்,
“முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.” என்றும்,
"தொழில் வளர்ச்சி இல்லாமல் மிகப்பெரிய பொருளாதார இலக்குகளை அடைவது சாத்தியமில்லை, இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளையும் பாதிக்கும்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு:
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்றும்,
“சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.” என்றும்,
“இந்திய விமான நிலையங்கள் ஆணையம்(Airports Authority of India), இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்(Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.”
"மேலும், நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறு குடியமர்வு உள்ளிட்ட பணிகளுக்காக அரசுத் தரப்பில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது" என்றும்,
“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.” என்றும்,
“தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான அரசின் முடிவுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளுடன் தொடர்புடைய முக்கிய விவாதமாக மாறியுள்ளது.