அரசியல்

விஜய்க்கு வந்த சோதனை ... உயர்நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ?

By Sumalekha
28 Aug 2026, 09:44 AM
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
தமிழ்நாடு தேர்தல் முடிவானது யாரும் எதிர்பாராத முடிவை மே 4 ஆம் தேதி சந்தித்தது. தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுகவை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து 4 மாதங்களை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியைப் பிடித்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. இந்நிலையில் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார்.

இதனிடையே பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் ஆர். சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் சிறார்களை பயன்படுத்தியும் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எமோஷனலாக பேசி வாக்குகளை பெற்றார் என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படும் என்றும், விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த தேர்தல் வழக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது.