அரசியல்

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

By Christon
24 Apr 2026, 01:30 PM
தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். "சோதனை நடத்தப்பட்ட உண்மையை ஏன் ஊடகங்களிடமோ, மக்களிடமோ தெரிவிக்கவில்லை?" என அவர் வருமான வரித்துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதாரங்களை ஒப்படைக்கத் தயார்

சோதனை நடத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்த செல்வப்பெருந்தகை, தன்னிடம் உள்ள ஹார்ட் டிஸ்க் (Hard Disk) மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். "புகைப்படங்களில் இருக்கும் இந்த அதிகாரிகள் யார்? சோதனையின் போது ஏன் காவல்துறை பாதுகாப்புடன் நின்றனர்? இதில் மறைப்பதற்கு என்ன ரகசியம் இருக்கிறது?" என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

வெள்ளை அறிக்கை கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைத்துச் சோதனை நடத்தப்படுவதாகச் சாடிய அவர், அதிமுக, அமமுக மற்றும் பாமகவினரின் வீடுகளில் இதுவரை எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? அங்கு எவ்வளவு பணம் அல்லது பொருட்கள் கைப்பற்றப்பட்டன? என்பது குறித்து வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.