விளையாட்டு

IND vs ENG: இங்கிலாந்தின் வியூகத்தால் வீழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. அடில் ரஷித் ஓபன் டாக்!

By Christon
10 Jul 2026, 04:05 PM
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் ஐபிஎல் தரவுகளைக் கொண்டு அவரை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சவாலாக அமைந்துள்ள நிலையில், ஐபிஎல் தரவுகளைக் கொண்டு அவரை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.

'சொற்ப ரங்களில் அவுட்'

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கி வரும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் நம்பிக்கையளித்தாலும், பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். மான்செஸ்டரில் நடந்த தனது அறிமுகப் போட்டியில் 14 ரன்களும், டிரெண்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில் 13 ரன்களும் எடுத்திருந்த அவர், பிரிஸ்டலில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியிலும் 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஆட்டமிழந்தார். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து வென்று 2-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மீண்டும் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்

பிரிஸ்டல் போட்டியில் சூர்யவன்ஷி தொடக்கத்தில் ஜோஷ் டங்கின் ஓவரில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அதிரடியாகத் தொடங்கினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது சக வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில், பந்தைச் சரியாகக் கணிக்காமல் அடித்து சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முந்தைய டிரெண்ட் பிரிட்ஜ் போட்டியிலும் ஆர்ச்சரே இவரை அவுட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நல்ல தொடக்கத்தைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியாத ஏமாற்றத்துடன் சூர்யவன்ஷி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இங்கிலாந்தின் வியூகம் என்ன?

இளம் வீரர் சூர்யவன்ஷியைக் கட்டுப்படுத்தியது குறித்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் கூறுகையில், "அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்குப் புதியவர் என்றாலும், ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியதை வைத்து எங்கள் குழு அவரது பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து துல்லியமான தரவுகளைத் திரட்டியது. அதன்படியே எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

மேலும், "அவருக்கு வெறும் 15 வயதே ஆவதால் அவர் மீது நிச்சயம் அழுத்தம் இருக்கும். தற்போதைக்குத் தனது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு இந்திய அணி நிர்வாகம் அவருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது சரியானதே. வரும் காலங்களில் பல்வேறு ஆடுகளங்களில் விளையாடி, சரிவுகளைச் சந்திக்கும் போது அவர் தனது ஆட்டத்தை மாற்றியமைத்துக் கற்றுக் கொள்வார்" என்றும் அடில் ரஷித் தெரிவித்தார்.