தமிழ்நாடு

Businessman Threaten Case : 'ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன்' - தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் திருப்பம்

By leninakathiya
30 Aug 2024, 11:55 AM
Businessman Threaten Case in Chintadripet at Chennai : ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தொழிலதிபர் புகார் கொடுத்த நிலையில், தன் மீது பொய்யான புகாரை அளித்து இருப்பதாக மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Businessman Threaten Case in Chintadripet at Chennai : கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கம்ப்யூட்டர் சேல்ஸ் செய்து வரும் அக்தர் உசேன் என்பவர் தன்னை புதுப்பேட்டையை சேர்ந்த உபயதுல்லா என்பவர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் இல்லை என்றால் ஆம்ஸ்டாங்கை போல கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீதான விசாரணை நடந்துவரும் நிலையில், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து புதுப்பேட்டையை சேர்ந்த உபயதுல்லாவின் மகன் ஹாஜி இஸ்மாயில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உபயதுல்லா, தனது மகன் ஹாஜி இஸ்மாயிலிடம் வியாபாரத்திற்காக அக்தர் உசேன் என்பவர் 20 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், 15 லட்சம் ரூபாய் மட்டுமே கடனை திருப்பிக் கொடுத்துள்ள நிலையில் அக்தர் உசேன் இடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு பலமுறை தனது மகன் நாடிய போதும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

இதனால் தான் அக்தர் உசேனிடம் செல்போனில் பணத்தை கேட்ட போது, தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பின்னர் தான் மிரட்டியதாக அக்தர் உசேன் பொய்யாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி தனது பணத்தை பெற்று தரக் கூறி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகவும் உபயதுல்லா தெரிவித்துள்ளார்.