தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காரணமாகக் கூறி சங்கீதா, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமண உறவை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், ஜீவனாம்சம் வழங்கவும், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சங்கீதா தரப்பில் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் குறிப்பிடப்படாதது குறித்தும் விளக்கம் கேட்டார்.
அதே நேரத்தில், குடும்ப வழக்குகளில் நடைமுறைக்கு ஏற்ப இருவரையும் முதலில் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்ததுடன், வழக்கை இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை வேறு தேதிக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஏனென்றால், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் மாற்று தேதிக்கு விஜய் தரப்பு கோரிக்கை வைத்தனர். ஆனால் காணொளி மூலம் சங்கீதா ஆஜர் ஆனதால் இன்றே விசாரிக்கும்படி சங்கீதா தரப்பு கேட்டுக்கொண்டதால், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்தவேளையில் முதலமைச்சர் விஜய் - சங்கீதா இருவரின் விவாகரத்து வழக்கு பிற்பகலிலாவது நடக்குமா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.