தமிழ்நாடு

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

By VASUKI
30 Aug 2025, 07:29 PM
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வையொட்டி, சென்னை, தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2025 அன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 10:00 மணி முதல் மாலை 18:00 மணி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும்.

பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதுகாப்பாகவும், நெரிசல் இல்லாமலும் சீரமைக்க, தாம்பரம் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்:

வேளச்சேரி பிரதான சாலை:

சந்தோஷபுரம் பகுதியிலிருந்து செம்மொழி சாலை மற்றும் மாம்பாக்கம் செல்லும் வாகனங்கள், மேடவாக்கம் மேம்பாலம் வழியாகத் திருப்பிவிடப்படும்.

ஓ.எம்.ஆர் சாலை:

சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், துரைப்பாக்கம் வழியாக 200 அடி ரேடியல் சாலைக்குத் திருப்பிவிடப்பட்டு, பின்னர் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாகப் பள்ளிக்கரணை சென்றடையும்.

மாம்பாக்கம் - மேடவாக்கம் சாலை:

மாம்பாக்கத்திலிருந்து தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் வாகனங்கள், மேடவாக்கம் பாபு நகர் 3வது தெரு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, நீலா நகர், விமலா நகர் வழியாக வேளச்சேரி பிரதான சாலைக்குச் செல்லும்.

சித்தாலப்பாக்கம் சாலை:

சித்தாலப்பாக்கத்திலிருந்து தாம்பரம்/பள்ளிக்கரணை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், வேங்கைவாசல் பிரதான சாலை மற்றும் சந்தோஷபுரம் வழியாகத் திருப்பிவிடப்படும்.

தாம்பரம் மேம்பாலம்:

தாம்பரம் மேம்பாலத்திலிருந்து வேளச்சேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், குரோம்பேட்டை, திருநீர்மலை மேம்பாலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டு, 200 அடி ரேடியல் சாலை வழியாக வேளச்சேரி செல்லும்.

மேலும், தாம்பரம் முதல் வேளச்சேரி பிரதான சாலை, ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் கனரக வாகனங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 18:00 மணி வரை செல்ல அனுமதி இல்லை.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறு தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.