சினிமா

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

By Sumalekha
27 Jun 2026, 05:39 PM
தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ”பாரதிராஜாவை புதைத்த மண் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் பாக்கியராஜின் உடலுக்கு தீ மூட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. இயக்குநர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் என தனக்குள் பல திறமைகளை கொண்டிருந்தவர். அவரைப் போல கொங்கு மண்டலத்தில் இன்னொரு கலைஞர் உருவாக எத்தனை காலம் ஆகும் என்று தெரியவில்லை” என்றார்.

பாரதிராஜா - பாக்கியராஜ் உறவு குறித்து பேசிய அவர், “இருவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் ஆழமானது. பாரதிராஜாவின் பல வெற்றிகளுக்கு பாக்கியராஜின் வசனங்களும் முக்கிய காரணமாக இருந்தன. அவரது வசனங்கள் எளிமையான மொழியில் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தன” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைரமுத்து, “அவரது பல படங்களுக்கு நான் பாடல்கள் எழுதியுள்ளேன். அவருக்கு பாடல் எழுதுவது மிகவும் சவாலானது. அவர் மனதில் வைத்திருக்கும் பல்லவி வரும் வரை முழுமையாக திருப்தி அடைய மாட்டார். படைப்பில் அத்தனை கவனமாக இருப்பார்.இன்று புகழின் உச்சியில் இருக்கும் பாக்கியராஜ், அந்த இடத்தை எளிதில் அடையவில்லை. பல மேடு பள்ளங்களை கடந்து வந்தவர். சென்னையில் ரிக்ஷா ஓட்டியவர் பாக்கியராஜ் என்பதை மக்கள் மறக்கக் கூடாது” என்று கூறினார்.

மேலும், ”கிராமத்து இளைஞர்களாலும் படம் இயக்க முடியும் என்பதை காட்டியவர் பாரதிராஜா. அதேபோல் சாதாரண மனிதர்களாலும் எழுதவும், நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்தவர் பாக்கியராஜ்” என வைரமுத்து பாராட்டினார். சுந்தரகாண்டம் படத்தை உருவாக்குவதற்காக அந்த நூலை படிக்க கற்றுக்கொண்டார் பாக்கியராஜ். ஒரு படைப்புக்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி அப்படிப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

“பாரதிராஜா மறைந்த பிறகு நானும் பாக்கியராஜும் சுமார் 40 நிமிடங்கள் பேசினோம். பாக்கியராஜுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். ‘பாக்கிய’ பத்திரிகையில் அவருக்காக ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’ என்ற தொடரை எழுதியுள்ளேன்” என உருக்கமாக கூறினார். இறுதியாக, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வைரமுத்து, பாக்கியராஜின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறினார்.

நேரலையில் பார்க்க