இந்தியா

உ.பி.யில் கொடூரம்: வரதட்சணை கேட்டு கர்ப்பிணி அடித்துக் கொலை!

By Christon
05 Oct 2025, 09:14 PM
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதன் காரணமாக, கர்ப்பிணி ஒருவர் தனது கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை செய்யப்பட்டவரின் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வரதட்சணைக் கொடுமையும் கொலையும்

மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி குமாரி (21) என்பவருக்கும், சச்சின் என்பவருக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ரஜினி குமாரி அண்மையில் கர்ப்பமானார்.

ரஜினி குமரியின் கணவர் சச்சின் மற்றும் அவரது உறவினர்கள், ஒரு தொழில் தொடங்குவதற்காகக் கூடுதல் வரதட்சணையாக ரூ.5 லட்சம் கொண்டு வருமாறு அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த வரதட்சணைக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், நேற்று முன்தினம் (செப்.03) அவர்கள் ரஜினி குமாரியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆதாரங்களை அழிக்க முயற்சி

ரஜினி குமாரி உயிரிழந்த பின்னர், இந்தக் கொலைக்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், குற்றவாளிகள் அவரது உடலைத் தங்களது வயலிலேயே வைத்து அவசரமாக எரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ரஜினி குமரியின் தாயார் சுனிதா தேவி, நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ரஜினி குமரியின் கணவர் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா, டினா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 6 பெரும் தப்பியோடியதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.