இந்தியா

வரதட்சணை கொடுமை.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவன்!

By Christon
24 Aug 2025, 04:04 PM
நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் நிக்கி (28) என்ற இளம்பெண் தனது கணவர் குடும்பத்தாரால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பெண்ணின் கணவர் விபினை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தந்தை சத்யவீர் பாட்டி மற்றும் சகோதரர் ரோஹித் பாட்டி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நொய்டாவின் சிர்சா கிராமத்தை சேர்ந்த விபின் என்பவருக்கும் நிக்கி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணையாக ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்ட போதிலும், மாமியார் குடும்பத்தினர் தொடர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு நிக்கியை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி கணவர் விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் நிக்கியை வரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிக்கியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் அவரை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிக்கியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பேட்டியளித்த நிக்கியின் சகோதரி காஞ்சன், “விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் நிக்கியைத் தொடர்ந்து சித்திரவதை செய்தனர். நான் தலையிட முயன்றபோது, என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். சில சமயங்களில் குழந்தைகள் கண் முன்பே எங்களை தாக்கியுள்ளனர். கடந்த 21 ஆம் தேதி நிக்கியை, விபின் தொடர்ந்து தாக்கினார். மேலும் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், காவல்துறையின் கூடுதல் துணை கமிஷனர் சுதீர் குமார் கூறுகையில், நிக்கி கடுமையான தீக்காயங்களுடன் ஆகஸ்ட் 21 மாலை ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். காஞ்சன் அளித்த புகாரின் பேரில், விபின், அவரது சகோதரர் ரோஹித், அவரது பெற்றோர் தயா மற்றும் சத்யவீர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிக்கியின் கணவர் விபின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.