தமிழ்நாடு

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி.. ஆபாச சைகை காட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு!

By MUTHUKRISHNAN
03 May 2025, 09:36 AM
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த விவகாரத்தில் ஓட்டேரி போலீசார், காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தினேஷ் என்பவர், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். அப்போது திரும்பிப் பார்த்த பெண்ணிடம் ஆபாச சைகை செய்ததாக, பெண்ணின் கணவர் காவலரை வழிமுறைத்து தாக்கி காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்தார்.

”மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு காவலரே இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டது தண்டனைக்குறியது. அவர் அதிகமாக குடித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் அவர் ஒட்டி வந்த இரு சக்கர வாகன இரு புறமும் வண்டியின் நம்பர் பிளேட் இல்லை. காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்" என பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் தினேஷ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஓட்டேரி போலீசார், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையிலான செயலில் ஈடுபடுதல் சட்டப்பிரிவில் காவலர் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று காவலர் தினேஷ், தன்னைத் தாக்கி ஆபாசமாக பேசி மிரட்டியதாக பெண்ணின் கணவர் மீது கொடுத்தப் புகாரில், ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.