தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

By Christon
09 Jul 2026, 12:23 PM
தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 22 ஆம் தேதி, தவெக தலைவரின் பிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்த கட்சியினர், கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது மாணவர்களை தவெக தலைவருக்கு பிறந்தநாள் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முகத்தின் வடிவில் 3000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்துள்ளனர். மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.