தமிழ்நாடு

மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

By Christon
08 Jun 2026, 11:39 AM
மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள்திருடப்பட்ட வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் (Hard disks) திருடப்பட்ட வழக்கைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மின் வாரிய தலைமையகத்தில் முக்கியத் தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் உள்ள முக்கியத்துவம் மற்றும் பின்னணிகளைக் கருத்தில் கொண்டு, வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரை செய்தார். இந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் அடுத்தகட்ட மேல் விசாரணை விரைவில் தீவிரமடையவுள்ளது.