தமிழ்நாடு

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

By Jayakumar
10 Jun 2025, 10:00 AM
தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை பகுதியை சேர்ந்த பழங்குடியினரான செல்வகுமார் மகன் பரத். இவர் தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் பரத்தை முதலமைச்சர் ஸ்டாலின், பெரம்பலூர் தொகுதி எம்பி அருண் நேரு உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் பரத் 5 ஆண்டுகள் சட்ட பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க தன்னிடம் போதிய பொருளாதார வசதி இல்லை என்றும், தனது மனைவி இறந்து பத்து ஆண்டுகள் கடந்து நிலையில், பரத்துடன் சேர்ந்து தனது மூன்று குழந்தைகள் மற்றும் பெற்றோரையும் தான் ஒரே நபராக பார்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பதாக தந்தை செல்வகுமார் வேதனை தெரிவித்தார். மேலும், அன்றாட தேவைகளுக்கு தான் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தனது மகன் பரத் சட்டக் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தனக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அவரது கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.