தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் டெல்லி சென்று இன்று (மே 27) பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சேவா தீர்த்' அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஜோசப் விஜய் தமிழக முதல்வரான பிறகு பிரதமருடன் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் டெல்லி திகார் சிறை பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையினர் சார்பில் அவருக்குச் சம்பிரதாயப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள்
இன்று மாலை நடைபெற்ற பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, முதல்வர் விஜய் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது. ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தியப் பிரதமர் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.