தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக முதன்முறையாகக் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’ போன்ற முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களின் பெயர்களைத் தமிழக அரசு மாற்றியமைத்திருந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரும் பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.