தமிழ்நாடு

NEPAL FLOODS: 103 பேர் இல்லை… 400 தமிழர்களா? நேபாள வெள்ளத்தில் புதிய அதிர்ச்சி!

By Sumalekha
29 Aug 2026, 05:28 PM
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 400 வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கனமழையால் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை இதுவரை கூறப்பட்ட 103-ஐ விட அதிகமாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 400 பேர் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

103 பேர் என முதலில் வெளியான தகவல்:

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. முதற்கட்டமாக, சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் நேபாளம் சென்ற 103 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் பலர் எங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பாக உள்ளார்களா என்பது குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர்.

21 பேர் பத்திரமாக சென்னை திரும்பினர்:

இதற்கிடையே, கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் நேபாளம் சென்றவர்களில் 21 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.

இதனால், அவர்களது குடும்பத்தினர் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், இன்னும் பலரின் இருப்பிடம் குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்காததால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரயில் மூலம் சென்ற 140 தமிழர்கள்:

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் நேபாளம் சென்றவர்களைத் தவிர, ரயில் மூலம் தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற 140 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு சிறு குழுக்களாகவும் பலர் நேபாளம் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதால், அவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் 400 பேர்?

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் சென்றவர்களின் எண்ணிக்கை 400 பேர் வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 140 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், 21 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

90 பேரின் நிலை என்ன?

அதேவேளையில், சுமார் 90 பேரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியும், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

நேபாளத்தில் தொடர்ந்து நிலவும் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையே, அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு சார்பிலும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.