உலகம்

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும்- டிரம்ப் அறிவிப்பு!

By Christon
15 Jun 2026, 08:23 AM
வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), இரு நாடுகளுக்கு இடையேயான மோதலால் கடந்த நான்கு மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது. தற்போது எட்டப்பட்டுள்ள அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து, இந்த முக்கியக் கடல் வழிப்பாதையில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை உடனடியாகத் திரும்பப் பெற அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சர்வதேசச் சந்தைக்குக் கச்சா எண்ணெய் தடையின்றிச் செல்வதற்கான சிக்கல் நீங்கியுள்ளது.

டிரம்பின் சமூக வலைதளப் பதிவு

இது குறித்து அதிபர் டிரம்ப் தனது 'டிரூத் சோசியல்' பக்கத்தில், "ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான அமைதி ஒப்பந்தம் இப்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்! ஹார்முஸ் ஜலசந்தியைச் சுங்கக் கட்டணம் ஏதுமின்றி (Toll-free) முழுமையாகத் திறக்க நான் உத்தரவிடுகிறேன். அதே நேரத்தில், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாகத் திரும்பப் பெறவும் அனுமதி அளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு

மற்றொரு பதிவில் அவர், "இந்தச் சிறந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும். எனக்கு முன்பு பல அதிபர்கள் ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த முயன்று தோற்றனர். கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுடன் இந்த ஜலசந்தி திறக்கப்படுவதால், இந்த பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இரு முனைகளிலிருந்தும் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.