உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: குறுக்கே வந்தால் குண்டு வீசுவோம்.. ஓமன் நாட்டிற்கு டிரம்ப் வார்னிங்!

By Christon
18 Aug 2026, 08:21 AM
ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட்டால் ஓமான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஹோர்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு மோதல் நீடித்து வரும் நிலையில், ஓமன் நாடு குறுக்கே வந்தால் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள போர்நிறுத்தத்திற்கான கெடு முடிவடைய உள்ள நிலையில், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தைச் சீரமைப்பது தொடர்பாக ஈரானிய தூதர்கள் ஓமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ஓமன் இதில் தலையிட்டால் அந்நாட்டின் மீது கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஈரான் சரணடைய வேண்டும்

ஈரான் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்ட டிரம்ப், அவர்கள் சிறந்த முறையில் காய் நகர்த்தினாலும் தற்போது பலவீனமடைந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இப்போரை முடிவுக்குக் கொண்டுவரத் தனக்கு எவ்வித அவசரமும் இல்லை என்றும், அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் தனது முடிவுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் எந்த சூழ்நிலையிலும் அணுஆயுதத்தைப் பெறக்கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான மற்றும் முக்கிய இலக்காகும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையிலான 60 நாட்கள் போர்நிறுத்தக் கெடு விரைவில் முடியவுள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.