உலகம்

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

By VASUKI
30 Aug 2025, 07:04 PM
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். SCO உச்சி மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பதையும், கலந்துரையாடுவதையும் எதிர்நோக்குகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு

சீனாவுக்குப் புறப்படும் முன், ஜப்பானில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கியப் பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்திவரை, பல்வேறு தொழில்களில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சிறு வணிகங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானிய ஆளுநர்களையும், இந்திய மாநில அரசுகளையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா-சீனா உறவுகளில் முக்கியத்துவம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரி விதித்ததால், இந்தியா - அமெரிக்க உறவுகளில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், இந்தச் சீனப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. SCO உச்சி மாநாடு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.