சினிமா

"இளையராஜா பாடலை பயன்படுத்தக்கூடாது.." ஜி.வி.பிரகாஷுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

By Christon
06 Jul 2026, 12:31 PM
'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் தனது பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் பாடலைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஹேப்பி ராஜ்'. இத்திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான புகழ்பெற்ற 'முரட்டுக்காளை' திரைப்படத்தின் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தனது முன் அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் அந்தப் பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்கக் கோரியும், படத்திலிருந்து அந்தப் பாடலை நீக்க உத்தரவிடக் கோரியும் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ. சரவணன், உரிய அனுமதியின்றிப் பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியிருப்பது பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் குறித்துப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். படம் வெளியாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.