இந்தியா

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்.. டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

By Christon
31 Aug 2026, 01:50 PM
2012-இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மைன்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்ப விஷயத்தில் தாயார் கண்டித்ததால் குடும்பத்தினரிடம் சொல்லாமல் நொய்டாவில் உள்ள உறவினர் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் கனமழையில் நனைந்தபடி பாரி சவுக் பகுதியில் நின்றிருந்த சிறுமி, அங்கிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல வாகனம் தேடியுள்ளார்.

அப்போது அங்கு வந்த காலியான 'ஸ்லீப்பர்' ரகப் பேருந்தின் நடத்துநர், தாங்களும் நொய்டா செக்டர் 63 நோக்கித்தான் செல்வதாகக் கூறியதால் சிறுமி பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால், அப்பேருந்து பணிமனையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தது என்பது பின்னரே தெரியவந்தது.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடத்துநரும் ஓட்டுநரும் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். எதிர்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். 'ஸ்லீப்பர்' பேருந்தில் இருந்த திரைச்சீலைகளைப் பயன்படுத்தி இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை டெல்லி காஷ்மீரி கேட் ரிங் ரோடு அருகே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், வட டெல்லியின் திமார்பூர் பகுதியில் வைத்துப் பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39) மற்றும் நடத்துநர் சந்தீப் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த பேருந்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் பேருந்துக்குள் இருந்து சிறுமியின் முடி இழைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கைதான இருவரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.