அரசியல்

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

By Sumalekha
12 Jul 2026, 08:00 AM
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். கூடவே, இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து புதிய ஊழல் புகாரில் வேலுமணி சிக்கியுள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஈஸ்வரி உள்ளிட்ட சிலரிடம் பேசினோம். "கடந்த 2021ல் கோவை மாநகராட்சியில் இளநிலை பணியாளர்கள் பதவியை அவசர அவசரமாக நிரப்பினார்கள். 654 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 440 பேரை நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தார்கள். இதில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கவில்லை. எங்களுக்கு உரிய தகுதி இருந்தும், அந்த காலியிடங்கள் மற்றும் தேர்வு குறித்து முறையாக விளம்பரங்கள் செய்யப்படவில்லை. இதனால் எங்களால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. அரசுப் பணி நியமனத்தின்போது பின்பற்ற வேண்டிய விதிகளை பின்பற்றாமல் 54 பேர் ஒரே நாளில் பணியில் நியமித்தனர்.

இதன் பின்னணியில் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் கறாரான உத்தரவுதான் இருந்திருக்கிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டை அணுகினோம், உயர் நீதிமன்றம் எங்களின் கூக்குரலுக்கு நீதி வழங்கியுள்ளது. 'புறவாசல் வழி நியமனம் நடந்துள்ளது' என கோர்ட் சம்மட்டி அடி கொடுத்துள்ளது" என்றனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை அடிப்படையாக வைத்து கோவை மாவட்ட திமுக. பொறியாளர் அணி நிர்வாகி சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "மாநகராட்சி காலியிடங்களுக்கு விண்ணப்பித்தல் பற்றி செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட்டதில் துவங்கி ஒரே நாளில் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,பணி நியமனம் வழங்கல் என எல்லாவற்றிலும் முறைகேடு நடந்திருக்கு ஜெட் வேகத்தில் நியமனம் பண்ணியிருக்காங்க. என்னா ஸ்பீடு பாருங்க.. இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையும் ஒழுக்கமாக பின்பற்றபடவில்லை என புகார் எழுந்துள்ளது. 54 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதில் எந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது, பணம் புரண்டுள்ளது என தகவல்களை திரட்டத் துவங்கியுள்ளோம்.

மாஜி அமைச்சர் வேலுமணி முதல் சிட்டிங் அதிகாரிகள் வரை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்" என்றார். நாம் இதுகுறித்து வேலுமணியின் கருத்தறிய தொடர்புகொண்டபோது, சென்னையில் கட்சிப்பணியில் அண்ணன் பிஸியாக இருக்கிறார். அந்த நியமன விவகாரத்தில் அவரின் பங்கு எதுவுமில்லை. வெற்று அரசியல் பரபரப்புக்காக அவரை இழுக்கின்றனர்" என்றனர். அப்டிங்ளாண்ணா!?