லைஃப்ஸ்டைல்

மின்மினி பூச்சிகளை பார்ப்பது இதுவே கடைசியா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

மின்மினி பூச்சிகளை இரவில் பார்த்து வியந்து, அதனை கையில் வைத்து விளையாடிய நாம், மின்மினிப்பூச்சியை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மின்மினி பூச்சிகளை பார்ப்பது இதுவே கடைசியா?  எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!
மின்மினி பூச்சிகளை பார்ப்பது இதுவே கடைசியா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!
காலையில் துயில் எழுப்பும் சேவலின் கொக்கரிப்பு, மாமரத்தில் கூவும் குயிலின் ஓசை, ஐன்னலில் வந்து கீச் கீச் என்னும் சிட்டுக்குருவியின் சத்தம் இவையெல்லாம் அனுபவித்த தலைமுறை நாமாகத்தான் இருக்க முடியும். இந்த வரிசையில் தான் மின்மினிப்பூச்சுகளும்.

மின்மினிப்பூச்சிகள், மினுக்கு பூச்சி, மின்னுட்டாம் பூச்சி, பிளிங்கி, விளக்கு பூச்சி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், வெளிர் மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள், இளஞ்சிவப்பு கலந்த பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் ஒளியை உமிழ்கின்றன. மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதிவினையை தமது உடலில் உருவாக்குவதன் காரணமாக ஒளி வெளிப்படும் நிலையில், பெரும்பாலும் தங்களது இரை மற்றும் துணையைக் கவர்வதற்காகவும், எதிரிகளை எச்சரிப்பதற்காகவும் ஒளியை உமிழ்கின்றன என்று சொல்லப்படுகிறது.

கோடைக்காலம் தொடங்கி விட்டால் இந்த மின்மினி பூச்சிகள் ஒளிரும் என்றும், இது ஒளிர்வதை வைத்தே கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 61 நாட்கள் அதாவது இரண்டு மாதங்கள் மட்டுமே.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மின்மினி பூச்சிகளால் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வனப்பகுதி காடு அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகத்தைப் போல இரவில் மின்னும். இந்த காட்சி பார்ப்போருக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகையச் சூழலில், இந்த மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக தான் இருக்கும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் மற்றும் காடழிப்பு ஆகியவை இந்த மின்மினிப் பூச்சிகளின் வாழ்விடங்களின் அழிவு காரணமாக அமைவதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து, அவை உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் கடினமாகி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இரவில் செயற்கை ஒளி அல்லது ஒளி மாசுபாடு, மின்மினிப் பூச்சிகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பெரும்பாலான மின்மினிப் பூச்சி இனச்சேர்க்கை அவற்றின் இயற்கையான ஒளிர்வையே நம்பி இருக்கும் நிலையில், தெருவிளக்குகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற செயற்கை மூலங்களிலிருந்து வரும் ஒளி இந்த சமிக்ஞைகளில் தலையிடுவதால் மின்மினிப் பூச்சிகளின் இனச்சேர்க்கை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மின்மினிப் பூச்சி அழிவுக்கு அதிகரிக்கும் ஒளி மாசுபாடு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதே போல விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளின் பரவலான பயன்பாடு மின்மினிப் பூச்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த இரசாயனங்கள் மின்மினிப் பூச்சிகளை நேரடியாகக் கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் இரையின் எண்ணிக்கையையும் குறைக்கின்றன.

மற்றொரு காரணம் காலநிலை மாற்றம்.. வாழ்விடங்களின் வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவு மாறும் போது அவை, மின்மினிப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சிகளைப் பாதிக்கின்றன.

மின்மினிப் பூச்சிகளின் அழிவு, நாம் எதிர்கொள்ளும் பரந்த சுற்றுச்சூழல் சவால்களை நினைவூட்டுகிறது என்றும், அவற்றின் அழிவு மனிதர்கள் உட்பட எண்ணற்ற பிற உயிரினங்களை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மின்மினி பூச்சிகளின் அழிவானது மனித குலத்திற்கான எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் பூவுலகின் நண்பர்களை சேர்ந்த ஜீயோ டாமின். தொடர்ந்து, மின்மினி பூச்சிகள் அழிவை தடுப்பதற்கு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்தும் விவரித்துள்ளார்.

எனவே, மின்மினி பூச்சிகளை இப்போதைய தலைமுறையினரில் சிலர் பார்த்துக் கூட இருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஃபோட்டோக்களோ, வீடியோக்களிலாவது பார்ப்பதற்கான வாய்ப்புகளாவது இருக்கிறது. ஆனால், நம் அடுத்த தலைமுறைக்கு மின்மினி பூச்சி என்ற ஒன்று இருந்ததா என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு சூழல் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், முடிந்தளவு ஒளி மாசுவை கட்டுப்படுத்த நாம் தான் முயற்சிகள் எடுக்க வேண்டும்.