அரசியல்

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.!  வழிக்கு வந்த அண்ணாமலை..?  குஷியில் அதிமுக மாஜிக்கள்..!
நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தாலும், அந்த கட்சியால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அந்த கூட்டணியில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மகன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியே தொடர்ந்த நிலையில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பத்து வருடம் ஆட்சி செய்த அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர, அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக-வும் 4 எம்.எல்.ஏ.-க்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் தான் உன்மையான எதிர்க்கட்சி போல் செயல்படுகிறோம் என அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியினரும் பேசி வந்தது அதிமுக-வினருக்கு எரிச்சலைக் கிளப்பியது. தொடர்ந்து அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும், அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொந்தளிப்பதும் தொடர்கதையாகியது. ஒரு கட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனங்களால் அதிமுக கொதித்தெழுந்து 2023 செப்டம்பரில் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியது.

பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறியதற்கு அண்ணாமலையே முக்கிய காரணம் என அதிமுக-வினர் கூறி வந்தனர். அத்தோடு இனி எப்போதும் பாஜக உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அடித்துக் கூறினார்.

நீ விடாக்கண்டன் என்றால் நான் கொடாக்கண்டன் என்று பொங்கிய அண்ணாமலையோ, அதிமுக தலைவர்களை கடுமையாக சாடியதோடு, மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டெல்லிக்கே மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். போதிய கூட்டணி பலம் இல்லாமல் 2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் பின்னர் தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.. நாம் இணைந்த கைகளாக இருந்திருந்தால் 20 தொகுதிகள் வரை வென்றிருக்கலாம் என இரு கட்சி தலைவர்களும் பேசி வந்தனர். ஆனால், அண்ணாமலை மட்டும் தான் கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்தநிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னரே கூட்டணியை இறுதி செய்ய பாஜக மேலிடம் விரும்பியது. வேறு யாரும் தன்னை நம்பி வராத நிலையில் மீண்டும் பாஜக உடன் இணைவது சரி என முடிவெடுத்த அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை மட்டும் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி தலமையிடம் முறையிட்டதாக கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல், பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் தான் புதிய தலைவர் என்பதை உறுதி செய்த அடுத்த சில மணித்துளிகளில் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானதை அறிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி செயல்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என்றும் அமித்ஷா கூறினார்.

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டும் அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். கூட்டணி குறித்து எதுவும் கருத்து கூறக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு இரண்டு கட்சிகளுமே உத்தரவிடும் நிலையும் வந்தது. கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைக்க எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வரும் நிலையில், நான் மட்டும் தனி வழி என்று அண்ணாமலை ஒரு வழியில் சென்று கொண்டிருந்தார். அண்ணாமலையை ஓரங்கட்டியதாக அவரது ஆதரவாளர்களும் பாஜக தலைவர்களை சாடினர். இதனால், அண்ணாமலை ஆதரவாளர்களின் செயல்பாடுகளால் இந்த கூட்டணி மீண்டும் உடையும் என்று அரசிய விமர்சகர்கள் கூறி வந்தனர். கூட்டணியில் நிலவும் விரிசல் குறித்து தகவலறிந்த அமித்ஷாவும் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகைதந்து, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோரை தனித்தனியாக அழைத்துப் பேசினார். அப்போது அதிமுக உடன் கூட்டணி வைத்தது உறுதியானது. அவர்களுடன் நீங்கள் இணைந்து பயணிக்க வேண்டும்.. எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று அமித்ஷா ஸ்ட்ரிக்டாக உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே அதிமுக வெற்றி பெற்றால் அந்த கட்சி தலைமையில் தான் ஆட்சியா.. அல்லது கூட்டணி ஆட்சியா என்ற கருத்து கிளம்பி, கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனை நயினார் ஒரு வழியாக சமாளிக்க, இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தமக்கு அதிமுக ஆட்சியும் இல்லை, கூட்டணி ஆட்சியும் இல்லை.. பாஜக ஆட்சி என்பத்பே தமது விருப்பம் என்று கூறி மீண்டும் கூட்டணி தலைவர்களை கலகலக்க வைத்தார்.

இந்தநிலையில், தனிக்காட்டு ராஜா நாண்டா என கூறி வந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, ஆளும் திமுக-வை கடுமையாக விமர்சித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில், இங்கு கூடியிருக்கும் கூட்டன் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கை மணி என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து மக்கள் முடிவு செய்துவிட்டதாக கூறிய அண்ணாமலை, எங்களுக்கு நிதி வேண்டாம் சாமி தான் வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்றார். நிதி யார்.. சாமி யார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை நிதி என்று கருணாநிதி குடும்பத்தையும், சாமி என்று எடப்பாடி பழனிசாமியையும் தான் குறிப்பிட்டுள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.. நேரடியாக பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்ல மனம் வராவிட்டாலும், நாசுக்காக தன் நிலைப்பாட்டை அண்ணாமலை விளக்கியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அண்ணாமலையின் இந்த திடீர் மாற்றம் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை குஷிப்படுத்தி உள்ளதாம்... இதனை உறுதி செய்யும் விதமாக கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அண்னாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்துவிட்டதாக அதிமுக-வினர் நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில், அவர் சாமி என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடவில்லை.. அண்ணாமலையார் பெயரை தாங்கி நிற்கும் தன்னை தான் அந்த சாமி என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே எங்களுக்கு அண்ணாமலை தான் முதலமைச்சர் என்று வார் ரூம் பாய்ஸ் மறுபுறம் அட்ராசிட்டியை தொடங்கியுள்ளனர்.