அரசியல்

நீங்கள்தான் போலி விவசாயி.. முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீங்கள்தான் போலி விவசாயி.. முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி
CM Stalin and edappadi palanisamy
ஈரோடு மாவட்டம்,பெருந்துறையில் கடந்த 11 ஆம் தேதி வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் மேடையில் பேசிய அவர், "விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது அதிமுக ஆட்சி. விவசாயிகள் தற்கொலைகள் கடந்த ஆட்சியில் அதிகமாக இருந்தது. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பச்சை துரோகம் செய்தது அதிமுக. தோளில் பச்சை துண்டு போட்டுக் கொண்டு வேஷம் போடும் போலி விவசாயி நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக நாங்கள் வந்து நிற்போம்" என்று தெரிவித்தார்.

விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது ஜெயலலிதாவின் அரசு..

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்ற அரசு வேளாண் கண்காட்சி விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக பட்டியலிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.

மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் ஆய்வுத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க திமுக மேற்கொண்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது எனது தலைமையிலான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு. அவரது அரசில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது.

அத்திக்கடவு–அவினாசி திட்டம் சுமார் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 35 மாத தாமதத்துக்கு பிறகு, நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை திறந்த போலி விவசாயி முதலமைச்சர் ஸ்டாலின், விவசாய கண்காட்சி விழாவில் மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக நாடக வசனம் பேசியுள்ளார். இத்திட்டத்தை மாநில நிதியிலேயே நிறைவேற்றியது எனது தலைமையிலான அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவர். திமுக அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 2-ம் கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.

மேட்டூரில் காவிரியின் உபரி நீர், நீரேற்றுப் பாசனம் மூலம் நீரேற்றப்பட்டு, கால்வாய்கள் மூலம் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, பிறகு சரபங்கா நதியில் கலக்கும் இத்திட்டத்தின் பணிகள் எங்கள் ஆட்சியில் சுமார் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 50 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் முழுமை பெறவில்லை.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிய போலி விவசாயி ஸ்டாலினை வேளாண் பெருமக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

நீங்கள்தான் போலி விவசாயி..

தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி எனபதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் மு.க.ஸ்டாலின் மட்டுமே. 'நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை.

தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஜெயலலிதாவின் அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும்" என்று அவர் கூறியுள்ளார்.