Lady Doctor Rape Murder Case in West Bengal : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதிகேட்டு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்களை முற்றுகையிடப்போவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து 6,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.