பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் SU5 பிரிவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கத்தையும், திருவள்ளூரை சேர்ந்த மனுஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர். அதேபோல் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் SH6 பிரிவில் ஓசூரை சேர்ந்த நித்தியா ஸ்ரீ சிவன் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தநிலையில் பதக்கம் வென்ற மூன்று வீராங்கனைகளும் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் வீராங்கனைகள் மூவருக்கும் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.