ஆன்மிகம்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் பக்தர்கள் குவிந்தனர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். சதுரகிரி மலைக்கு மூன்று வழித்தடங்கள் உள்ளது. அதில் ஒன்று தேனி வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை யானைகஜம் மலைப்பகுதி வழியாகும்.

சதுரகிரி செல்ல அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இந்த மலைப்பாதை வழியாக பக்தர்களை வனத்துறை அனுமதிப்பது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வகையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதையடுத்து தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

வனத்துறை கண்காணிப்பு

யானைகஜம் மலைப்பகுதிக்கு அருகில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைத்து 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களிடம் தீப்பெட்டி, சூடம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களையும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து மலைப்பாதை வழியாக செல்ல அனுமதித்தனர்.