ஆன்மிகம்

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் , பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெறும், இந்த நாட்களில் அண்ணாமலையாருக்கும் அதே போல் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கும், திருநேர் அண்ணாமலையாருக்கும் தினந்தோறும் தாராபிஷேகம் நடைபெறும்.

அதன்படி கடந்த 4 ஆம் தேதி தாராபிஷேகம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது . அதன்படி நாளை மறுதினம் 28 ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறவுள்ளது .

அதற்காக 26 ஆம் தேதியான இன்று கொடிமரம் அருகில் உள்ள சம்மந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து , சம்பந்த விநாயகருக்கு தங்க காப்பு சாற்றி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சம்பந்த கணேசரிடம் உத்தரவு பெற்று, அதனைத் தொடர்ந்து உண்ணாமுலையம்மன் சந்நதி அருகே அண்ணாமலையாருக்கு 1008 கலசத்தை ஸ்தாபித்தும் , அதே போல் 108 உண்ணாமுலையம்மனுக்கு ஸ்தாபித்தும், முதல் கால யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வேத விர்பனர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் தொடங்கிய முதல் கால யாக சாலையில் பூர்ணாஹதியும் நடைபெற்றது .

Imageஅதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனாக சிறப்பு கலசம் வைத்து அதற்கு வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து பின்னர் சாமி அம்பாளுக்கு தனித்தனியாக நட்சத்திர ஆரத்தியும் , அதனை தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

நிறைவு நாளான நாளை மறுதினம்(28.05.2025) 4 கால யாக சாலைகள் நிறைவடைந்து பின்னர் 1008 கலசங்களை கொண்டு அண்ணாமலையாருக்கும் , அதே போல் 108 கலசங்களைக் கொண்டு உண்ணாமுலையம்மனுக்கும் ஸ்நானாபிஷேகம் நடைபெற்று அக்னி தோஷ நிவர்த்தி நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .