அரசியல்

திருச்சி பண்பலையில் ஹிந்தியா? MP துரை வைகோ எடுத்த நடவடிக்கை

திருச்சி பண்பலை 102.1-இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, முழு நேரமும் தமிழில் ஒலிபரப்பு மேற்கொள்ள திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ வைத்த வேண்டுகோள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி பண்பலையில் ஹிந்தியா? MP துரை வைகோ எடுத்த நடவடிக்கை
All India Radio Trichy FM
திருச்சி பண்பலை 102.1-யில் இரவு நேரங்களில் இந்தி மொழியில் நிகழ்வுகள் ஒலிபரப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுத்தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு துரை வைகோ வேண்டுக்கோள் வைத்திருந்தார். அதற்கு அரசின் சார்பில் நல்ல பதில் கிடைத்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் துரை வைகோ. அதன் விவரம் பின்வருமாறு-

24 மணி நேரத்திற்குள் கோரிக்கை ஏற்பு:

”இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்?

திருச்சி பண்பலை 102.1 இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, அதனை நிறுத்தி, முழு நேரமும் தமிழில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 31.05.2025 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது கோரிக்கையை வெறும் 24 மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொண்டு, 31.05.2025 அன்றைய இரவே தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு நான் பதிவு செய்கிறேன். இதுவரை இரவு டெல்லி பண்பலையை ஒலிபரப்பு செய்துவந்த சென்னை வானொலி நிலையம் இனி, ‘விவித் பாரதி தமிழை’ இரவில் ஒலிபரப்பு செய்யும் என்றும், அது, திருச்சி பண்பலை 102.1 - ல் அஞ்சலாகும் என்றும், இனி திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது நம் ஆன்மாவின் அடையாளம். தாய்மொழி என்பது பல்லாயிரக்கணக்கான நுண் உணர்வுகளை தன்னகத்தே கொண்டு மொழிப்பற்றாகவும், மொழி மீதான காதலாகவும் மாறிவிடும் பண்புடையது.

அப்படிப்பட்ட நம் தமிழ் மொழி நமது திருச்சி பண்பலையில் இரவில் இல்லையே என்பது பலருக்கும் வருத்தத்தை தந்த நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எனது கோரிக்கையை ஏற்று உடனே மீண்டும் தமிழுக்கு மாற்றியுள்ளது பாராட்டுக்குரியது. உள்ளபடியே இதை நான் வெற்றி செய்தியாக கருதுகிறேன். இதனை எனது கவனத்திற்கு கொண்டு வந்த தோழர்களுக்கும், ஆல் இந்தியா ரேடியோ அதிகாரிகளுக்கும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் “ என துரை வைகோ தெரிவித்துள்ளார்.



தனி ஒலிபரப்பு உரிமம் வழங்குக:

திருச்சி வானொலி நிலையத்திற்கு தனி ஒலிபரப்பு உரிமம் வழங்க வேண்டும் எனவும் குரல் எழுப்பியுள்ளார் துரை வைகோ. இதுக்குறித்து அவர் கூறுகையில், “இன்றைய நிலையில் இரவில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை தான் திருச்சி வானொலி அஞ்சல் செய்ய முடியும். இந்நிலையை மாற்றி இணை ஒலிபரப்பு இல்லாமல் பகல் நேர ஒலிபரப்பு போலவே இரவிலும் திருச்சி வானொலியில் தனி ஒலிபரப்பாக திருச்சி வானொலி நிலையமே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யும் உரிமையை கொண்டுவர வேண்டும். அத்துடன் 20 கி.வாட் ஒலிபரப்பு திறன்கொண்டதாக திருச்சி பண்பலையை தரம் உயர்த்த வேண்டும்.

அப்படி கொண்டுவரப்பட்டால், வேலை வாய்ப்புகள் பெருகும், விளம்பர வருவாய் உயரும், பொழுபோக்கு அம்சங்கள் அதிகரிக்கும், முக்கியமாக 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல செய்திகளை தனித்தன்மையோடு ஒலிபரப்பு செய்ய முடியும். எனவே இதனையும் கருத்தில் கொண்டு, திருச்சி வானொலி நிலையத்திற்கு 24*7 தனி ஒலிபரப்பு செய்யும் உரிமையை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார் துரை வைகோ.