அரசியல்

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்
CM Stalin and L.Murugan
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், மருத்துவமனையின் உட்கட்டமைப்பு தொடர்பான கற்பனை காட்சி வெளியிடப்பட்டது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.

அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன" என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய அரசின் திட்டங்கள் பலவற்றை தங்களுடையதாக ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் முடிவுற்று, 2026 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற செய்தி ‘கிலி’ ஏற்படுத்தியுள்ளது போல. முதல்வருக்கு 'கிலி’ ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தாங்கள் பயன்படுத்திக் கொண்ட மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை, 2026 தேர்தலுக்கு பயன்படுத்த முடியாதே என்ற வருத்தமும் பதற்றமும் தங்களது பதிவில் தெளிவாகத் தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரின் பதில் என்ன..? மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கிக் காட்டுவோம் என சூளுரைத்தது முதலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உறைந்து போயுள்ளார்.

குடும்ப அரசியல் நடத்தி ஊழலின் உறைவிடமாக இருக்கும் மு. க. ஸ்டாலினிடம், அமித்ஷா எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்திலும் கொள்ளையடிக்கும் திமுகவினர், தமிழகத்தை தங்கள் வேட்டைக் காடாக மாற்றிவிட்டனர். மதுரை எய்ம்ஸ் உட்பட எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு எந்தவொரு ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை. சொல்லப்போனால் தடை செய்கிறது.

திமுக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யாமல் இழுந்தடித்து வருவதால் இரயில்வே உட்பட எத்தனையோ துறை சார்ந்த திட்டங்கள் தமிழகத்தில் முடங்கியுள்ளன. திட்டங்களை செயல்படுத்தவும், அனுமதி வழங்கவும் வேண்டிய மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் பல திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. பல மாநில அரசுகள் முனைப்பு காட்டி மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து புதிய புதிய திட்டங்களை பெற்று செயலாற்றி வருகின்றன. ஆனால், கமிஷன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் போலி திராவிட மாடல் திமுக அரசு, எப்படி நேர்மையாக மக்கள் திட்டங்களை செயல்படுத்தும்?

தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் கூட இவர்களின் “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனுக்கு” பயந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை தான் நிலவுகிறது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ள முதலமைச்சர், மக்கள் நலத்திட்டங்கள் பற்றி பேசும் தார்மீக உரிமையை எப்போதோ இழந்துவிட்டார்.

இருள் சூழ்ந்த திமுக ஆட்சியில் மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ விரைவில் வெளிச்சம் தரும்" என்று தெரிவித்துள்ளார்