அரசியல்

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்
நள்ளிரவில் தியானம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிமுக –பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி

அதேநேரம் தேர்தலுக்கு முன்னதாக கடைசி நேரத்தில் கூட பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் 2026ல் அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உறுதியாக கூறி வருகின்றனர்.

நள்ளிரவில் தியானம்

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக நள்ளிரவில் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ளது சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம்.

இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன், பைரவர், கருப்பசாமி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகள் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இபிஎஸ்காக வேண்டுதல்

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டியும், அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி இரவு 10.30 மணியளவில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். பின்பு கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.