அரசியல்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Fulfill the demands of sanitation workers - TTV Dhinakaran
கோவையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், "கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.