அரசியல்

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்
JACTTO GEO State Coordinators Deny Media Reports of Meeting with TVK leader Vijay
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தற்போது பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர், மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி கௌரவித்து வருகிறார். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அ.மாயவன் தலைமையிலான ஒரு குழு நடிகர் விஜய்யினை சந்தித்து பேசியதாக தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியாகியது.

தோழர் மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்க் கழகம்) தலைமையிலான நிர்வாகிகள் தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியதற்கும், ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கும் தொடர்பில்லை என தற்போது விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

கடந்த 13.06.2025 அன்று நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன் அவர்கள் சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஒய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பேசிய செய்தி என்பது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப்பேசியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு ஜாக்டோ-ஜியோ சார்பில் மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேரமைப்பாகும். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஒய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது.

Image

இன்றைக்கும் தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ-ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம். மேலும், பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025 க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பானது, அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, ஜாக்டோ ஜியோ சார்பாக மேற்கண்ட நடிகர் மற்றும் சங்கத்தலைவர் அவர்களை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, பத்திரிக்கைகளில் இச்செய்தியை திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் விரைவில் தொடங்கவுள்ள சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யினை அரசு அதிகாரிகள் அடங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பு சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.