அரசியல்

முருகன் மாநாடு: திமுகவினர் மீது மக்களுக்கு சந்தேகம் - தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

 முருகன் மாநாடு: திமுகவினர் மீது மக்களுக்கு சந்தேகம் - தமிழிசை  சௌந்தர்ராஜன் விமர்சனம்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்
அமித்ஷா மதுரை வருகையையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அமித்ஷா வர இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உற்சாகத்துடன் சென்று கொண்டிருக்கிறோம். மதுரை என்றாலே சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது தான் அடையாளம் நாங்கள் மதுரையில் ஒன்று கூடி கலந்து கொள்கிறோம். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நாங்கள் மதுரையில் கூடினாலே திமுகவினருக்கு அச்சம் வருகிறது. மீனாட்சி ஆட்சி புரியும் மதுரைக்கு நாங்கள் சென்றால் மீனாட்சி எங்களுக்கு அருள் புரிந்து விடுவார் என்பதற்காகவும், முருகன் எங்களுக்கு அருள் புரிந்து விடுவார் என்பதற்காகவும் திமுகவினர் பயப்படுகிறார்கள்.

நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாடு நடத்த இருக்கிறோம் அவர்கள் பயத்துடன் அந்த முருகன் மாநாடை பார்க்கிறார்கள். அரசியல் மாநாடாக இருந்தாலும் சரி, முருக பக்தர்கள் மாநாடாக இருந்தாலும் சரி, நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் ஆன்மீகம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநாட்டை நடத்துகிறோம்..

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு பலத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாஜகவின் மதவாத அரசியலை வட மாநிலத்தவர்கள் நம்புவார்கள் தமிழகத்தவர்களும் முருகனும் மயங்க மாட்டார்கள் என திருமாவளவன் கூறியது குறித்து கேட்டபோது, மதவாத அரசியல் என்று எங்களை கூற முடியாது நாங்கள் எப்பொழுதும் முருகனை கும்பிடுகிறோம். முருகன் மீது நம்பிக்கை இல்லை என கூறிவிட்டு திமுகவை சார்ந்தவர்கள் முருக மாநாடு நடத்தினால்தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று விமர்சனம் செய்தார்.

திருமாவளவன் கவலைப்பட வேண்டாம் நாங்கள் நடத்துவது மனிதத்துவ மாநாடு மதவாத மாநாடு இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாலங்கள் திறந்தது வளர்ச்சிக்காக தான். 2026க்கு பிறகு திமுகவினர் ஓய்வு எடுப்பார்கள் அப்பொழுது எங்களுக்கு வெற்றிகள் வரும் அப்பொழுது நாங்கள் பேசுகிறோம்.

மாநாடு தமிழகத்தில் மட்டும்தான் உத்திரபிரதேசம், குஜராத்தில் நடத்த முடியாதா என செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பி இருந்தது குறித்து கேட்டபோது, மாநாடு எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் தமிழகத்தில் நடத்திவிட்டு எங்கு வேண்டுமானால் நடத்துவோம், எங்களுக்கு எங்கு வேண்டாமானாலும் முருகன் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்தியா முழுவதும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. திமுகவைச் சார்ந்தவர்களுக்கு தான் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கேயும் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என கூறினார்.