அரசியல்

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Tamilisai Soundararajan
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நாளை நாங்கள் அனைவரும் மதுரையில் நடக்கவிருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறோம். சகோதரி நமீதாவும் இந்த மாநாட்டில் நாளை கலந்து கொள்கிறார்.

முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு பயம்:

முருக பக்தர்கள் மாநாட்டை பார்த்து தமிழக அரசுக்கு பயமும், பதற்றமும் வந்துள்ளது. இதை கண்டித்து ஒருவர் மனித சங்கிலி நடத்துகிறார். மற்றொருவர் அறிக்கை விடுகிறார். மதங்களை வைத்து பிரிக்க முடியாது என பயந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கே மாநாட்டு பந்தல் நிரம்பி வழிகிறது.

இனிமேல் இந்துக்களை தமிழக முதல்வர் பாராபட்சமாக நடத்த முடியாது. இதுவரை 3000 குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் கூட முதல்வர் கலந்து கொள்ளவில்லை. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உட்பட ஒரு பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

உங்களுக்கு என்ன வெட்கம்:

திருமாவளவன் கோவிலுக்கு போவது போல் போய்விட்டு அங்கு இந்து மத அடையாளமாக நெற்றியில் வைக்கப்பட்ட திருநீரை அழிக்கிறார். இந்துக்கள் தானே நீங்கள், அதை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம் உங்களுக்கு. அதை அழித்துவிட்டு தான் நீங்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது.

பதாகையும் கட்டுமான பணியும்:

'தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிக் கொண்டிருக்கும்போது பின்னால் வைக்கப்பட்டிருந்த அலங்கார பதாகை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் சற்று அதிர்ந்து போனார் தமிழிசை சௌந்தர்ராஜன், பதாகை சரிந்ததோடு ஒப்பிட்டு பேசுகையில்'

"இதாவது பரவாயில்லை ஒரு பதாகை தனியார் உடையது. ஆனால் முதல்வர் தஞ்சாவூரில் ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு வந்தார். இப்போது எனக்கு பின்னாடி இருந்த அலங்காரம் விழுந்தது அது போல தான் அவர்களின் கட்டுமான பணி உள்ளது" என்று விமர்சித்தார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்:

மேலும் பேசிய அவர், "அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்தும், அமித்ஷா வந்ததிலிருந்தும், முருகன் மாநாடு நடத்துவது, யோகி ஆதித்யநாத் வருவதைப் பற்றியும், பவன் கல்யாண் வருவதைப் பற்றியும் என அனைத்திற்கும் திமுகவுக்கு பதற்றம்.

நீங்கள் மற்ற மாநிலத்தவரை இங்க அழைக்கும் போது நாங்கள் ஏன் அழைக்க கூடாது. உத்தரப் பிரதேசத்தில் ராமர், கொல்கத்தாவில் காளி தமிழகத்தில் முருகர் என எங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அடையாளம் உள்ளதாக எங்களை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு தான் எந்த அடையாளமும் கிடையாது.

முருகன் எங்களிடம் வேலை கொடுத்துள்ளான். தீமைகளை ஒழிக்க எப்படி சூரசம்காரம் நடந்ததோ அதுபோல தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போகும் அளவிற்கு அந்த வேல் எங்களுக்கு உதவி செய்யும்" எனத் தெரிவித்தார்.

'மா' விவசாயிகள் போராட்டம் - மனவேதனை அளிக்கிறது:

மேலும், "தற்போது தமிழகத்தில் 'மா' விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு மாம்பழம் ஜூஸ் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த மங்கைகளை தெருவில் கொட்டி விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு என்பதற்கு சாலையில் விவசாயிகள் மாங்காய்களை கொட்டியது போராடுவதே சாட்சி" எனக் கூறினார்.

தமிழக பாரம்பரியத்தை நிரூபித்தது பாஜகதான்:

தொடர்ந்து பேசிய அவர், "கீழடி தொடர்பாக திமுக மாணவர் அணி போராடியது வெற்றி என எப்படி முதல்வர் கூறுவார். கீழடியில் ஆராய்ச்சி நடந்தது முழுக்க முழுக்க பாஜக ஆட்சியில் தான். ஆனால் இப்போது திமுக நாங்கள் தான் நாங்கள் தான் என சொல்வது தவறு. ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியில் தமிழக பாரம்பரியத்தை நிரூபித்தது பாஜக தான்" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்னும் அழகான குழந்தை:

"தமிழக அரசு மக்களுக்கான பணியில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. "இன்னும் பத்து மாதம் கழித்து ஒரு அழகான குழந்தை பிறக்க இருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி. அந்த குழந்தை தான் தமிழகத்தில் முடி சூடப் போகிறது" என்று நம்பிக்கை தெரிவித்தார்.