அரசியல்

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்
Tamilnadu BJP leader Nainar Nagendran pressmeet in nellai
நெல்லையப்பர் திருக்கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளி தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் இன்று ஒப்படைத்தார்.

இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-

”நெல்லையப்பர் கோவிலில் செய்யப்பட்டு வருகிற வெள்ளி தேருக்கு பக்தர்களால் 175 கிலோவிற்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. நானும் ஒரு கிலோ வெள்ளி கொடுத்துள்ளேன். 2004 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் கோவிலுக்கு திருப்பணி செய்ய அனுமதி பெற்று நெல்லையப்பர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

Image

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

திருமாவுக்கு வேண்டுக்கோள் விடுத்த நயினார்:

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் இடையிலான பிரச்சனையின் பின்னணியில் பாஜக இல்லை.

பாஜக அதிமுக கூட்டணி உடைந்து விட வேண்டும் என்பது திருமாவளவனின் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் களத்தில் இருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில், திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான ‘மாதந்தோறும் மின் கட்டணம்’ என்கிற திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.”

மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் முறை:

”ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது நடைமுறையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்படுகிறது. அதுப்போலவே தங்க நகை அடகு வைத்து கடன் பெற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டதும், சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும்” என தெரிவித்தார்.

”என்ஆர்சி என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல. அண்டை நாடுகளிலிருந்தும், மேற்கு வங்கத்தின் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிக்கப்படபோவதில்லை” என தெரிவித்தார்.