தமிழ்நாடு

திருவண்ணாமலை அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!

திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!
Chola period inscriptions discovered near Tiruvannamalai
திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த தண்டரை ஆகிய கிராமங்களில் பழங்கால கல்வெட்டுக்குள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் மற்றும் குழுவினர் இரு இடங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில், மெய்யூரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1 தூம்புக்கல் வெட்டும், தண்டரையில் விக்கிரம சோழ காலத்தைச் சார்ந்த 2 தூம்பு கல்வெட்டுகளும் கண்டறிப்பட்டதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து பாலமுருகன் கூறியதாவது, "அக்காலங்களில் தூம்புக்கள் அமைத்து நீர் மேலாண்மை செய்ததை சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்டைய தொழில் நுட்பத்திற்கு இது சான்றாக அமைகிறது.

இக்கல்வெட்டில் "இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக் கூத்தன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மெய்யூரில் உள்ள தூம்பை அருங்குன்றக்கிழான் என்பவர் சிவனின் பெயரை பொன்னம்பலக்கூத்தன் என வைத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், "தூம்புக்கு வேறு பெயர்களாக குமிழி , மதகு என்ற வரிசையில் தோரணமும் அமைகிறது. தண்டரை பெரிய ஏரியில் இரண்டு தூம்பு கல்வெட்டுகளும் விக்கிரம சோழன் காலத்தை சேர்ந்தவையாகும். இக்கல்வெட்டில் விக்கிரம சோழனின் நான்காவது ஆட்சி காலத்தில் "சாங்கியம்முடையான் திருவந்தேவன் இடுவித்த தூம்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை தொடர்பான பணிகளை அறிய முடிகிறது" என்றார்.

மேலும், "திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட இடத்தில் தூம்புக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் நீர் பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தது என்பதற்கு முக்கிய சான்றாகும்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இக்கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்" என்றார்.

"தூம்பு கல்வெட்டுகளால் ஏரி பராமரிக்கப்பட்டுள்ளதை பல்லவர் காலத்தில் இருந்து வந்தது. அதற்குண்டான சான்றுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்று ஆய்வு மையங்கள் ஆவணப்படுத்தும் தூம்புகள், கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவற்றை அரசு உரிய முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்துவதோடு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.