தமிழ்நாடு

டோல்கேட்டில் தகராறு: விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு

 டோல்கேட்டில் தகராறு: விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவிலில் டேல்கேட்டில் தகராறில் ஈடுபட்டதாக விசிகவினர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு சந்திப்பு வரை நான்கு வழிச்சாலை தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்து வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

விசிகவினர் தகராறு

இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து காரில் சென்ற விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் டோல்கேட்டில் 1ம் நம்பர் பூத் வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பணியாளர், 1ம் நம்பர்பூத் சர்வர் இயங்கவில்லை.

எனவே 2ம் நம்பர் பூத் வழியாக வாருங்கள் என கூறி உள்ளார்.இதில் அங்கிருந்த ஊழியர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் டவுன் ரயில்வே நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர், டோல்கேட் ஊழியர் ஆகாசை, ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி பூத் 2ல் போடப்பட்டு இருந்த பேரிகார்டை அடித்து சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் வழக்குப்பதிவு

இதுகுறித்து ஆகாஷ், ஆரல்வாய்மொழி காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் லியாகத் அலி உட்பட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று திருச்சியில் திருமாவளவன் தலைமையில் மதசார்பின்மை காப்போம் பேரணி நடந்தது. அதில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.