தமிழ்நாடு

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது.. மனைவி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது.. மனைவி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை
Insta celebrity Vishnu arrested
இன்ஸ்டா பிரபலமான விஷ்ணு(32) மற்றும் அழகு கலை நிறுவனம் நடத்தி வரும் அஸ்மிதா( 33) ஆகியோர் ஒரு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கம் பகுதியில் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தொழிலை விஷ்ணு கவனித்து வந்தபோது, அவரது மனைவி அஸ்மிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கருத்து வேறுபாடு முற்றி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு அஸ்மிதா வடபழனி காவல் நிலையத்தில் தனது கணவரான விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் தனது மனைவியோடு சேர்ந்து வாழ்வதாக கூறி விஷ்ணு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியதையடுத்து, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விஷ்ணு மீண்டும் மது போதைக்கு அடிமையாகி அவரது மனைவி அஸ்மிதாவை அடித்து கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அஸ்மிதா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற விசாரணையில் விஷ்ணு, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகக் கூறி மீண்டும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, பின் கடந்த 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் விஷ்ணு, நீட்டா ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததும் அதை வைத்து இன்ஸ்டாவில் பிரபலமானதும் பின்னர் த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசி இன்ஸ்டாவில் புகழடைந்துள்ளார்.

அதேபோல அவரது மனைவி அஸ்மிதா அழகு கலை நிறுவனம் தொடங்கியுள்ளார். இதனிடையே இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை எழுந்ததால், இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஷ்ணு தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் தனது மனைவி அஸ்மிதா குறித்து நண்பர்களிடத்திலும் Youtube சேனல்களில் தவறாக சித்தரித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அஸ்மிதா, தன்னை பற்றி அவதூறாக பொதுவெளியில் பேசி தன் மீது தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய தனது கணவர் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

பின்னர், இந்த வழக்கானது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் செய்தல், மிரட்டுதல், நம்பிக்கை மோசடி, தாக்கி காயம் ஏற்படுத்துதல், தனி நபரை தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் இன்று காலை இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு தி.நகரில் நண்பரின் வீட்டுக்கு பார்டிக்கு சென்றபோது, அங்கு தனியாக இருந்த நண்பரின் தங்கையிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் விஷ்ணுவை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.