தமிழ்நாடு

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை
பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை
79வது சுதந்திர தின உரை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி கேட்டிருந்தார். பிரதமரின் வேண்டுகோளை சுட்டிக்காட்டி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்

இது குறித்து கவிஞர் வைமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இந்தியப் பிரதமர் அவர்களே! தங்களின் விடுதலைத் திருநாள் பேருரைக்கு மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த தங்கள் மாண்புக்கு என் ஜனநாயக வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்.

தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல். மனிதம் என்ற ஒற்றைக் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பது அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட கனவு மற்றும் நிறைவேறாத கோரிக்கை. இந்தியாவின் 79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்.

ஆவலோடு காத்திருப்போம்

தாங்கள் கேட்டுக்கொண்ட வண்ணம் நமோ செயலியிலும் இதனைப் பதிவிடவிருக்கிறோம். இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம் ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, சுதந்திர தின உரையின் போது தான் என்ன பேச வேண்டும் என்று நாட்டு மக்கள் பரிந்துரைகளை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் கோரிக்கை

மேலும் எந்த கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்ட உரை அமைய வேண்டும் என்பது குறித்தான பரிந்துரைகளையும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அவர்களின் பரிந்துரைகளை My.gov.in என்ற இணையத்தில் சென்று வழங்க வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.