தமிழ்நாடு

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!
சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!
சாகர் கவாச் (SAGAR KAVACH) என்ற கடல் மார்க்கமாக அந்நிய நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பயிற்சி ஒத்திகை கடலோர பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் மத்திய மாநில பாதுகாப்பு அமைப்புகள் உடன் ஒருங்கிணைந்து 25.06.2025 முதல் 26.06.2025 வரை 2 நாட்கள் சென்னை பெருநகர் உட்பட தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்படி, வடக்கு மற்றும் தெற்கு ஆலோசனையின் பேரில், 4 மண்டல இணை ஆணையாளர்களின் கண்காணிப்பில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு ஒத்திகையில் தொடர்ச்சியான வாகன தணிக்கை, முக்கிய அரசு உயர் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், போக்குவரத்து முனையங்கள், மக்கள் கூடும் பகுதிகள், தங்கும் விடுதிகளில் சுழற்சி முறையில் தணிக்கைகள் செய்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகைகளில் தேவைப்படும் அனைத்து செயல்முறைகளையும் ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் நவீன தொலை தொடர்பு சாதன வசதிகளுடன் புரசைவாக்கத்தில் உள்ள பாதுகாப்பு சென்னை காவல் (SCP) அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அதில் காவல் துறை, தீயணைப்பு மீட்பு படையினர், மருத்துவ குழுவினர், மொழிப்பெயர்ப்பாளர்கள், பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அதிரடிபடையினர் கொண்ட குழு நிகழ்வுகளை கண்காணித்து உரிய நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்து செயல்படுவர்.

நேற்று (25.06.2025) காலையில் துவங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை பெருநகர காவல், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சோம்பேறி மடம் அருகே உதவி ஆய்வாளர் கிரிஜா தலைமையிலான காவல் குழுவினர் வாகன தணிக்கையின் போது, சந்தேகப்படும்படி ரேபிட்டோ ஆட்டோ மூலம் ஊடுருவ முயன்ற 02 நபர்களை காவல் குழுவினர் மடக்கி பிடித்து வேப்பேரி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் காவல் விசாரணை குழுமத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று (25.06.2025) இரவு 7.15 மணியளவில் ஊடுருவ முயன்ற Redforce-ஐ சேர்ந்த 6 ஒத்திகை வீரர்களும், 8.15 மணியளவில் ஊடுருவ முயன்ற Red Force ஐ சேர்ந்த5 ஒத்திகை வீரர்களும் பிடிப்பட்டனர். அவர்களிடமிருந்த 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிப்பட்ட 11 நபர்களும் வேப்பேரி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் காவல் விசாரணை குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுவரை 13 ஒத்திகை வீரர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
ஒத்திகை பயிற்சிக்கான வழிகாட்டுதல்களின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சாகர்கவாச் பாதுகாப்பு ஒத்திகையானது தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.